சென்னை,
தமிழ் மொழியை இழிவுபடுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், புத்தகத்தில் இந்த தகவல் தவறாக வந்துள்ளது என்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
தவறான செய்தி
சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு ஏரி பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு நிருபர்களிடம் கூறியதாவது:
பிளஸ்2 ஆங்கில புத்தகத்தில் தமிழ்மொழி தொடர்பாக அமைந்துள்ள பாடப்பகுதி தவறான செய்தி. பிரதமர் நரேந்திர மோடியே தமிழ் தான் தொன்மையான மொழி என்று சொல்லி இருக்கிறார்.
சமஸ்கிருதமா? தமிழா? என்பது தேவையற்ற கேள்வி. திருவள்ளூர் மாவட்டம் அதிராம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, அந்த பகுதியில் மனிதன் 3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கிறான் என்று தெரியவந்துள்ளது.
தேவையற்ற விவாதம்
அப்படி இருக்கும் போது தமிழ் 2300 ஆண்டுகள் தான் பழமையானது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். நம்முடைய எழுத்துவடிவம் 2300 ஆண்டுகளாக இருந்திருக்கிறது. இந்த தகவல் புத்தகத்தில் தவறாக வந்துள்ளது.
அதற்கான நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை வெகு விரைவில் எடுக்கும். தமிழை இழிவுபடுத்தும் எண்ணம் தமிழக அரசாங்கத்துக்கு கிடையாது. இது தேவையற்ற விவாதம்.
சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் பொன் மாணிக்கவேல் எந்த சான்றும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. கோர்ட்டு அதை சமர்ப்பிக்க சொல்லி இருக்கிறது. எந்த அமைச்சர்களுக்கும் இதில் தொடர்பு இல்லை என்பதை முதல்அமைச்சர் தெளிவாக சொல்லி இருக்கிறார். அவர் சான்றிதழை சமர்ப்பிக்கும் போது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.