தமிழக செய்திகள்

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது - ஜி.கே.வாசன்

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனைகளும், பயிற்சியாளரும் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.

விளையாட்டின் போது தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக வீராங்கனைகள் உடல் ரீதியாகவும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தமிழக அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு சூழல் உருவாகி, போட்டியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டதால் அவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

குறிப்பாக விளையாட்டின் போது பிரச்சனை எழக்கூடாது என்பதற்காக விளையாட்டை நடத்தும் மாநில அரசு உரிய விதிமுறைகளை முன் கூட்டியே கட்டாயப்படுத்தி, செயல்படுத்தியிருக்க வேண்டும். பஞ்சாப்பில் விளையாட்டின் போது உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படாதது முறையல்ல.

எனவே தற்போது பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக வீராங்கனைகளுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் பிற மாநிலங்களில் சென்று விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு உரிய பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெற்ற சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிந்து இனிமேல் இது போன்ற ஒரு தாக்குதல் சம்பவம் நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் நடைபெறக்கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தமிழக அரசும் நம் மாநில விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பிற மாநிலங்களுக்கு சென்று விளையாடும் போது பாதுகாப்பு இருப்பதை முன் கூட்டியே அம்மாநில அரசுடன் பேசி உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.