சென்னை,
தேனி மாவட்டம், போடி வட்டம், குரங்கணி மலைப்பகுதியில், மார்ச் மாதம் கொழுக்குமலை கிராமத்தில் இருந்து குரங்கணி கிராமம் நோக்கி கீழிறங்கிக்கொண்டிருந்த, மலையேற்றம் சென்ற 36 நபர்கள் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டனர்.
பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து குரங்கணி தீ விபத்தில் சிக்கி 23பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் குரங்கணி தீ விபத்து குறித்து விசாரணை நடத்த அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
குரங்கணி தீ விபத்து தற்செயலாக ஏற்பட்டதா அல்லது, வேண்டுமென்றே தீ வைத்தனரா என்பது போன்ற விசாரணைகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.மேலும் தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டன. குரங்கணி மலை காட்டுத்தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் 27ம் தேதிக்கு பின்னர் அரசிடம் அறிக்கை தர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் விசாரணை அறிக்கை தயாராக உள்ளதாக அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.