சென்னை,
தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டி, அவற்றை தி.மு.க., உறுப்பினர்கள் அவைக்குள் கொண்டு சென்றனர். இவர்களது செயல் உரிமை மீறல் என்று கூறி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த நோட்டீசை ரத்து செய்தது. விதிமுறைகளை பின்பற்றி புதிய நோட்டீசை அனுப்ப விரும்பினால், அனுப்பலாம் என்றும் உத்தரவிட்டது. இதன்படி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு புதிய நோட்டீசை உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில், குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து சட்டமன்ற செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.