தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் நடக்க இருந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 19ந்தேதிக்கு மாற்றம்

தமிழகம் முழுவதும் நடக்க இருந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வருகிற 19ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன அழுத்தம் போக்கும் ஆலோசனை வழங்கும் திட்டம் நேற்று நடந்தது. இதில் வளாகத்தில் உள்ள 104 சேவை மையத்தில் பணியாற்றும் மனநல ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்கினர். இதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், இலவச அழைப்பு சேவை எண்ணாக 104 அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர், அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பணிபுரியும் 333 மனநல ஆலோசனை மருத்துவர்கள் மூலம், மாணவர்களுக்கு செல்போன் வழியாக ஆலோசனை வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 17ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக இருந்தது. தடுப்பூசி குறைவாக இருப்பதாலும், மத்திய அரசிடம் இருந்து போதிய தடுப்பூசிகளை பெறும் பணி நடைபெறுவதாலும் அந்த முகாம் வரும் 19ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, அன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும். இதில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.