தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம்

ஆலங்குளத்தில் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமானது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் மகன் மதன் (32). இவர் ஆலங்குளம் -தென்காசி சாலையில் சொந்தமாக பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் தனது அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிள்களை வியாபாரத்திற்காக நிறுத்தி வைத்திருந்தார்.

சில விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை குடோனில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து விட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது. இதனால் குடோன் முழுக்க புகை மண்டலமாக காட்சி அளித்தது. புகை வெளியில் வருவதை பார்த்தவர்கள் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. அதன் மதிப்பு சுமார் ரூ.1.75 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.