சங்கராபுரம்
உண்டியல் உடைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த அரசம்பட்டு கிராமம் மணிமுத்தாறு அருகே பால தண்டாயுதபாணி என்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருபவர் சம்பத். இவர் கடந்த 12.12.22 பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றபோது கோவில் கதவு உடைந்து கிடந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.
ரூபாய் நோட்டுகள்
இந்த நிலையில் சம்பத் நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவில் வளாகத்தில் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததை கண்டு வியப்படைந்தார்.
பின்னர் இது குறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன் பேரில் சங்கராபுரம் போலீசாரும், ஊர் முக்கியஸ்தர்களும் விரைந்து வந்து கோவிலில் கிடந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு அவற்றை சேகரித்தனர். மொத்தம் ரூ.17 ஆயிரம் ரூபாய் இருந்தது.
போலீசார் விசாரணை
விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவாரம் கழித்து காணிக்கை பணத்தை மீண்டும் கோவிலில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை வீசி சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்டியலை உடைத்து திருடிய பணத்தை மர்ம நபர் ஒருவாரம் கழித்து கோவிலில் வீசி சென்ற சம்பவத்தால் அரசம் பட்டு கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது