சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை அதி தீவிரமாகி, கனமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், வழக்கமான இயல்பு மழையைக் காட்டிலும் பல மடங்கு அதிக மழை பெய்ததாலும் தமிழ்நாட்டின் பெரும்பகுதி மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிவாரணத்தில், அறுவடைக்கு தயாராக இருந்து வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். நடவு செய்து 15 நாட்களை தாண்டாத நிலையில் ஏற்பட்ட வெள்ளத்தாக்குதலில் அனைத்தையும் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.6 ஆயிரத்து 38 மதிப்புள்ள இடுபொருள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவித்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.
அதேநேரத்தில், அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகுப்பில் நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கையோடு, எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் ஏதும் அறிவிக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட பழைய தொகுப்பு வீடுகள் பல இடங்களில் வசிக்க முடியாத நிலைக்கு இடிந்து விழுந்து சேதம் அடைந்துவிட்டன. இந்த வீடுகளை புதுப்பித்து கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை நிவாரண அறிவிப்பில் இடம்பெறவில்லை என்பதை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.