சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.மேலும் அவர், செங்கோட்டையனின் ஆதரவாளர்களையும் பதவிகளில் இருந்து நீக்கி வருகிறார்.
இந்தநிலையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அருள் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ.வி.எம்.செந்தில் என்கிற கோடீஸ்வரன், சத்தியமங்கலம் நகர ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எஸ்.டி.காமேஷ் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
செங்கோட்டையனின் கட்சி பதவி பறிப்பை கண்டித்து அறிக்கை வெளியிட்ட ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அத்தாணி பேரூராட்சி முன்னாள் துணை செயலாளர் மருதமுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.இந்த ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.