தமிழக செய்திகள்

வாலிபர் எரித்துக் கொலை?

தூசி அருகே விவசாய நிலத்தில் ஒரு வாலிபர் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூசி

தூசி அருகே விவசாய நிலத்தில் ஒரு வாலிபர் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிந்த நிலையில் வாலிபர் பிணம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே ஏழாச்சேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் வழியாக அப்பகுதி மக்கள் சிலர் சென்றனர்.

அப்போது வேர்க்கடலை பயிரிட்டுள்ள நிலத்தில் ஒரு ஆண் பிணம் பாதி எரிந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே கிராம நிர்வாக அலுவலர் கோகுலராமனுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கோகுலராமன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அவர் தூசி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும்,

அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.