சென்னை,
தமிழகத்தில் சாதாரண அரசு பஸ்களில் (வெள்ளை நிற போர்டு) பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. ஆனால் அவசரத்தில் சில பெண்கள் டீலக்ஸ், சொகுசு பஸ்களில் ஏறி விடுகின்றனர்.
இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பஸ்சின் நிறத்தை 'பிங்க்' நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை போக்குவரத்து துறை மேற்கொண்டது.
அதன்படி 'பிங்க்' நிற பஸ்கள் இயக்கத்தை சென்னை மெரினா கடற்கரையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், மகளிருக்கான இலவச பஸ்களை முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. பேருந்தின் இருபுறங்களில் மட்டும் பிங்க் பெயிண்ட் அடிக்கப்பட்ட நிலையில், தற்போது முழுமையாக பிங்க் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.