தேவகோட்டை,
தேவகோட்டை அருகே தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்தது
புதுக்கோட்டையில் இருந்து ராமேசுவரம் நோக்கி நேற்று ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால்-கிளியூர் சந்திப்பில் சில நாட்களுக்கு முன்பு சாலை நடுவே தடுப்பு சுவர் எழுப்பினர். ஆனால் எவ்வித முன்னெச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் திருச்சி-ராமேசுவரம் சாலையில் வேகமாக வந்த சுற்றுலா வேன் அந்த தடுப்பு சுவற்றின் மீது ஏறியது. அப்போது வேன் டயர் வெடித்ததில் அப்படியே தலைகீழாக கவிழ்ந்தது.
5 பேர் படுகாயம்
இந்த வேனில் 5 பெண்கள் உள்பட 10 பேர் சென்றதாக தெரிகிறது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜ்(வயது 55) உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த வேனை கனரக வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.
சாலை நடுவே தடுப்பு சுவர் மிகச் சிறிதாக இருப்பதால் வேகமாக வரும் வாகனங்கள் அதில் மோதி கடந்த 2 நாட்களில் மூன்று விபத்துகளை ஏற்படுத்தி உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.