திட்டச்சேரி:
திட்டச்சேரி 15 -வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஒன்று இருந்தது. இந்த சமுதாயக்கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.தற்போது அதே இடத்தில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அப்போது பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்த போது கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், சமுதாயக்கூடம் பராமரிப்பு பணிக்காக பேரூராட்சி இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி 2021-22 கீழ் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் சமுதாயக்கூடத்தில் பராமரிப்பு பணி செய்யாமல் முழுவதும் இடிக்கப்பட்டதாகவும், மேலும் ஏற்கனவே இருந்த அளவைவிட குறைவான அளவில் சமுதாயக் கூடம் கட்டப்படுவதாகவும், சமுதாயக்கூடத்தை அனுமதி இன்றி இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பணியை தடுத்து நிறுத்தி பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்தனர். இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.