சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் சாவியை சென்னை மாவட்ட கலெக்டரிடம் பெற்ற ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகள் தீபா, தீபக், சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு வந்தனர்.
அப்போது வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் தீபா, தீபக் மற்றும் தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்டோர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அதிகாரிகள் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்கள் குறித்து தீபா, தீபக்குக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டின் வெளியே வந்த தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் அத்தை ஜெயலலிதா வாழ்ந்த இந்த வீட்டுக்கு மீண்டும் வருவது பெரிய வெற்றியாக பார்க்கின்றேன். அத்தை இறந்தபோது கூட என்னை வீட்டின் உள்ளே விடவில்லை.
ஜெயலலிதா வாழ்ந்த போது இருந்த வேதா இல்லம் வீட்டுக்கும் இப்போது இருக்கும் வீட்டுக்கும் நிறைய மாற்றம் உள்ளது. சசிகலா கூட இந்த வீட்டை மாற்றி அமைத்து இருக்கலாம். வேதா இல்லத்தில் ஜெயலலிதா வாழ்ந்தார் என்பதற்கான ஒரு அடையாளமும் இப்போது இல்லை என்றார்.