திருச்சி,
தவெக தேர்தல் மேலான்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியிலிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை சிலரின் அரசியல் தூண்டுதலால் எரிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அலுவலகத்தை எரித்தது மட்டுமில்லாமல், சுற்றி இருந்த கட்சி பேனர்களை எல்லாம் கிழித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
'தேர்தல் தோல்வி பயம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் வெளிப்பாடாகவே அவர்கள் இந்த செயலை செய்திருக்கிறார்கள்' என்று பார்க்கும் மக்களுக்குக் கண்கூடாகத் தெரிகிறது. மக்கள் செல்வாக்கை இழந்த மக்கள் விரோத ஆதிக்கவாதிகள், மக்கள் நமது கழகத்திற்குக் கொடுத்துவரும் பேராதரவை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், இதுபோல் குண்டர்களை ஏவி அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் உறுதியான உத்தரவின் பேரில் இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை உடனடியாக கைது செய்து, உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளன்று சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில், குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தேர்தல் ஆணையம் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.