சென்னை,
கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்புமனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதனிடையே திருவாரூர் இடைத்தேர்தல் பற்றி அனைத்து கட்சியினரின் கருத்துகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவாரூர் இடைத்தேர்தல் இப்போது வேண்டாம் என கூறும் கட்சிகள் தேர்தலை கண்டு பயப்படுகிறது. அ.ம.மு.க தான் உண்மையான மக்கள் இயக்கம் என்பதை நிரூபித்துக் காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.