தமிழக செய்திகள்

தூத்துக்குடி: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்குள்ள மூன்றாவது மாடியில் ஆதிராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு ஆதிராஜின் மகன் அருண் பாண்டியன் வீட்டில் உள்ள அறையில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் திடீரென வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு இருப்பதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT