தமிழக செய்திகள்

திருப்பூர்: நன்கொடை தராததால் பேன்சி கடையின் கண்ணாடி உடைப்பு - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே நன்கொடை தராததால் பேன்சி கடையின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது42). இவர் அதே பகுதியில் பேன்சி கடை வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று குருமூர்த்தி கடையில் இல்லாதபோது சிலர் நன்கொடை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடையில் இருந்த ஊழியர் முதலாளி இல்லை பிறகு வாருங்கள் என கூறியுள்ளார். மீண்டும் வரமுடியாது இப்போதே நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு ஊழியர் மறுக்கவே ஆத்திரமடைந்த அவர்கள், கடையின் முன்பு இருந்த அலமாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதையடுத்து குருமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.