சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு இருந்ததை போல் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி, ஜூன், ஜூலை, மாதங்களில் உச்சக்கட்டத்தை தொட்டது. அதன் பிறகு நீண்ட நாட்களாக படிப்படியாக குறைந்த வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். முக்கியமாக முககவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது.
கொளத்தூர், நங்கநல்லூர், கோடம்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் படிப்படியாக குறையும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் பகுதிகளில் கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு அளித்து பரவலைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.