திருச்சி,
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீதர் (45). இவர் கடந்த ஜூலை 30-ம் தேதி அரிஸ்டோ ரெயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார் மோதியதில் காயமடைந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ஸ்ரீதர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
அதன்படி, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று திருச்சி வந்தார். அப்போது உயிரிழந்த தலைமை காவலர் ஸ்ரீதர் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ஸ்ரீதர் மனைவியிடம் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.