கொடைக்கானல்,
தமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர்பாயிண்ட், குணாகுகை, பைன்மரக்காடுகள், பில்லர் ராக்ஸ், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட 7 சுற்றுலா இடங்கள் இன்று முழுவதும் மூடப்படுகிறது என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில், பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமைதோறும் மூடப்படுவது வழக்கம். ஆனால் இன்று தேர்தலுக்காக மூடப்படுவதால், நாளை (புதன்கிழமை) வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் திறந்திருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நேற்று குறைவாகவே காணப்பட்டது. அதேநேரத்தில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.