கோவை,
கோவை மாவட்டம் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட போதிலும் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கம் போலவே இருந்து வருகிறது. இந்த நிலையில் வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் அதிக வேகத்தில் ஓட்டி வருகின்றனர்.
மலைப்பாதையில் சாலை விதிகளை மதிக்காமல் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுகின்றனர்.அதே நேரத்தில் காரில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளில் சிலர் ஆபத்தை உணராமல் ஜன்னல் வழியாக வெளியே தொங்கி கொண்டு பயணம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், இதுபோன்ற அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வரும் சுற்றுலா பயணிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு?. ஆழியாறு சோதனைச்சாவடியிலேயே அவர்களை தடுத்து உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்றனர்.