ஏற்காடு,
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் சேலம் மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடினர். ஏற்காட்டுக்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்தனர்.
அவர்கள் லேடிஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், அண்ணா பூங்கா, கரடியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டதுடன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் படகு சவாரி செய்வதற்காக ஏராளமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை, மாலை நேரங்களில் கடும் குளிர் இருந்ததுடன் இதமாக இருந்தது. ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பூலாம்பட்டி
பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் கதவணை பகுதியில் படகு சவாரி செய்தும், அங்குள்ள நீர்மின் நிலையம் மற்றும் தடுப்பணை பகுதி, காவிரி படித்துறை, கைலாசநாதர் கோவில், காவிரித்தாய் சன்னதி, நந்திகேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து ரசித்தனர்.
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்ததையொட்டி இப்பகுதி வியாபாரிகள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சிக்கு உள்ளாயினர். அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் பூலாம்பட்டி பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.