தமிழக செய்திகள்

சாக்கடை கால்வாய் அமைக்க குழி: சேலம் பழைய பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டப்பட்டதால், சேலம் பழைய பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்

சேலம் பழைய பஸ்நிலையம் இடிக்கப்பட்டு அங்கு ஈரடுக்கு பஸ்நிலையம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பழைய பஸ் நிலையம் பகுதியில் தேங்கும் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக தலைமை தபால் நிலையம் அருகே தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியால் நேற்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையம், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அருணாச்சல ஆசாரி தெரு, கன்னிகா பரமேஸ்வரி கோவில், டவுன் போலீஸ் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.