தமிழக செய்திகள்

துணி துவைக்க கிணற்றுக்கு சென்றபோது சோகம் - பாட்டி, பேரன், பேத்தி சாவு

துணி துவைத்து கொண்டிருக்கும்போது பேரன், பேத்தி இருவரும் கிணற்றில் தவறி விழுந்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட் டம் பகுதியை சேர்ந்தவர் ருத்திரகுமார். இவரது மனைவி சாந்தி (வயது 65). இவருடைய மகன் முருகன். பேரன் தஷ்வந்த் (13). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கவுசிகா (11). 6-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் சிலாவட்டம் கிராமத்தில் வசித்து வரும் உறவு முறை பாட்டியான சாந்தி வீட்டுக்கு சென்றார். நேற்று சாந்தி தனது பேரன் தஷ்வந்த், பேத்தி கவுசிகா ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள தரை கிணற்றுக்கு துணி துவைக்க சென்றார். சாந்தி துணி துவைத்து கொண்டிருக்கும்போது பேரன் தஷ்வந்த், பேத்தி கவுசிகா இருவரும் கிணற்றில் தவறி விழுந்தனர்.

அவர்களை காப்பாற்ற சாந்தி கிணற்றில் குதித்தார். இதில் 3 பேரும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிலாவட்டம் பகுதியில் பாட்டி, பேரன், பேத்தி கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.