கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம் பட்டியில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடை உள்ளது. இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மோகன் குமார் (18 வயது) என்பவர் கடந்த 5 நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தார்.
இந்த நிலையில் லாரி டயருக்கு காற்று நிரப்பும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அதிக அழுத்தம் ஏற்பட்டு திடீரென்று லாரியின் டயர் வெடித்தது. இதில் மோகன் குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே மோகன்குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.