இஸ்லாமாபாத்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் புத்தாண்டில் வெளியிட்ட முதலாவது டுவிட்டர் பதிவில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தந்து வருகிற பாகிஸ்தானை கடுமையாக சாடி இருந்தார்.
அதில் அவர், கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 500 கோடி) அதிகமான தொகையை உதவியாக அமெரிக்கா முட்டாள்தனமாக வழங்கி வந்திருக்கிறது. அவர்கள் எதையும் நமக்கு தந்துவிட வில்லை. அவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். நமது தலைவர்களை முட்டாள்களாக கருதுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் நாம் வேட்டையாடுகிற பயங்கரவாதிகளுக்கு அவர்கள் அடைக்கலம் தருகிறார்கள். இனிமேலும் அவர்களுக்கு உதவ முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார். இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த நிலையில் அந்த நாட்டின் பிரதமர் அப்பாசி அங்கு உள்ள டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது அவர், அமெரிக்க தலைமை (டிரம்ப்) வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது கடுமையான பதிலை அளித்தது. அவர் தனது டுவிட்டர் கருத்தை திரும்பப்பெற வேண்டும். அத்துடன் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிறுமி ஜைனப் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், இந்த வழக்கில் பஞ்சாப் மாகாண அரசின் புலனாய்வும், அதில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றமும் திருப்தி அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.