சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திறந்தவெளி வேனில் நின்றபடி, ராயபுரம் போலீஸ் நிலையம் அருகே நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காசிமேடு, திருவொற்றியூர், வியாசர்பாடி, முல்லை நகர், மூலக்கடை சந்திப்பு, பெரம்பூர், கொளத்தூர், ஓட்டேரி சந்திப்பு ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். அதைதொடர்ந்து வால்டாக்ஸ் சாலையில் மத்தியசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்திய நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டிற்கு தேவை, வலிமைமிக்க உறுதியான தலைமை. அந்த தலைமைக்கு தகுதியானவர் தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி தான். இதையெல்லாம் கருத்திலே கொண்டுதான், அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணி மெகா கூட்டணி, வெற்றி கூட்டணி, மக்கள் நலன் சார்ந்த கூட்டணி ஆகும். நாடு பாதுகாப்பாக இருந்தால் தான் நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடையும்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் தனக்கென வாழாமல், நாட்டுக்காக வாழ்ந்தவர்கள். அவர்கள் மறைந்தாலும், அவர்கள் ஆற்றிய பணிகள் இன்னும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.மோகன்ராஜூம், நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். எளிமையானவர், திறமையானவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அவருக்கு முரசு சின்னத்திலே வாக்களிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.