சென்னை
நடிகர் ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசிய த.வெ.க தலைமை நிர்வாகியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்து உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார், அன்பு சகோதரர் ரஜினிகாந்த் குறித்து த.வெ.க கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளை பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.
அரசியலை கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த். புரட்சி தலைவரின் அன்பையும், புரட்சி தலைவியின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்க தக்கதல்ல.
அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்து விட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளை பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல் என தெரிவித்து உள்ளார்.