திருச்சி,
சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொணலை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே நின்றிருந்த 2 பெண்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, அவர்கள் ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தவமணி (வயது 66), ராம்ஜிநகர் மலையப்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமி (55) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 24 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.