தமிழக செய்திகள்

உடன்குடி அனல் மின் நிலையம்: முதல் அலகில் மின் உற்பத்தி தொடக்கம்

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கப்பலில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொண்டு வருவதற்காக கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 660 மெகாவாட் திறனில் இரண்டு அலகுகள் கொண்ட அனல் மின்சார உற்பத்தி நிலையத்தை ரூ.13 ஆயிரத்து 76 கோடி மதிப்பில் தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்து வருகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி தொடங்கியது. உடன்குடி அனல் மின்சார உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வருவதற்காக, உடன்குடி கடற்கரையில் இருந்து கடலில் 9 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பலில் இருந்து நிலக்கரி இறக்குவதற்கான முனையம் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மத்திய அரசின் பெல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அங்கு கடந்த 2021–2022-ம் ஆண்டு மின்சார உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடந்ததால், திட்டமிட்ட காலத்துக்குள் மின்சார உற்பத்தியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.நீண்ட இழுபறிக்குப் பின்னர் உடன்குடி மின்சார நிலையத்தின் முதல் அலகில் கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி இரவு 7.56 மணிக்கு சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டது. அப்போது 52 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த மின்சாரம் மின்வழித்தடத்தில் இணைக்கப்பட்டது.

Also read:குற்ற வழக்கு தொடர்வு துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 45 நபர்களுக்கு பணி நியமன ஆணை; மு.க. ஸ்டாலின் வழங்கினார்

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

உடன்குடியில் தொடர்ந்த முயற்சியின் விளைவாக, உடன்குடி அனல் மின்சார நிலையத்தின் முதல் அலகில் சோதனை அடிப்படையில் மின்சார உற்பத்தி நடைபெற்று வந்தது. ஆரம்பத்தில் ‘ஹெவி பர்னஸ் ஆயில்’ பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்யப்பட்டது. ஒரு மின்சார நிலையம் முழுத் திறனில் 72 மணி நேரம் தொடர்ந்து மின்சார உற்பத்தி செய்த பிறகு தான் வணிக மின்சார உற்பத்தி தொடங்கியதாக அறிவிக்கப்படும்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கப்பலில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொண்டு வருவதற்காக கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 6 லட்சம் டன் நிலக்கரி சேமிப்பு கிடங்கு, கடல் நீரை சுத்தமான நீராக மாற்றும் நிலையம், 400 கிலோவோல்ட் ஸ்விட்ச் யார்டு போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.1.50 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு, தற்போது 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2-வது அலகிலும் விரைவில் சோதனை ஓட்டம் தொடங்க இருக்கிறது.