தமிழக செய்திகள்

இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரணை - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

இலங்கையில் கடந்த 2009-ல் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை தொடர்ந்து உலக நாடுகளின் வலியுறுத்தலால் விசாரணை நடத்துவதற்கு 2015-ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளில் இலங்கை அரசும் ஒன்றாக இருந்தது.

இந்தநிலையில், தாங்கள் பங்கேற்று நிறைவேற்றிய தீர்மானத்தில் இருந்து வெளியேறுகிறோம். அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இது மீண்டும் இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அனுமதிக்கக் கூடாது.

இலங்கை இனப்படுகொலைகள் குறித்து சுயேச்சையான விசாரணை அமைப்பு ஒன்றை உருவாக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகிவிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT