சென்னை,
இந்தி மொழியை திணிப்பதற்கு தமிழகத்தில் எப்போதுமே கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தி தினத்தையொட்டி பாரதீய ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதற்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தி மொழியால்தான் இந்தியாவை இணைக்க முடியும் என்றும் அதில் அவர் கூறி உள்ளார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அவரது கருத்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நமது அரசியலமைப்பு சட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த நாள்முதலே மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக உள்துறை மந்திரி அமித்ஷா, நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தை தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி என கருத்து வெளியிட்டு இருப்பது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியாகவே தெரிகிறது.