சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய எஸ்.சி.எஸ்.பி. (பட்டியல் சாதிகள் துணைத் திட்டம்) நிதியில் இருந்து ரூ.1,560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்துக்காக மாற்றி சமூகநீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள இந்த தி.மு.க. அரசுக்கு எனது கண்டனங்கள்.
மேடைகளிலும், படங்களிலும் மட்டும் போலி சமூகநீதி பேசி வரும் இந்த அரசு, உண்மையில் பட்டியல் இன மக்களுக்கு இத்தகைய துரோகம் இழைத்திருப்பது, இவர்களின் உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.
பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி. இந்த அரசு உடனடியாக எஸ்.சி.எஸ்.பி. நிதியை உரிய துறையில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.