சென்னை,
சென்னையில் உள்ள தேசிய மருந்து சேமிப்பு கிடங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வரும் 8-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும். சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனா தடுப்பு மருத்து சேமித்து வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 2 கோடி தடுப்பூசி பதப்படுத்தி வைக்கும் வசதி தேசிய மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளது. கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கிய அடுத்த நாளில் இருந்து தடுப்பூசி விநியோகிக்க தமிழக அரசு தயாராக உள்ளது.
ஒரு நாளில் 100 பேர் வீதம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முதலில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அதன்பிறகு முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மாநிலம் முழுவதும் 51 இடங்களில் ராட்சத தடுப்பூசி சேமிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.