கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி வைகோ தொடர்ந்த வழக்கு - 26-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி வைகோ தொடர்ந்த வழக்கு வருகிற 26-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு, இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்க ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும்.

அந்த தீர்ப்பாயம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விசாரணை நடத்தி விடுதலைப் புலிகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளதா, இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்து, அது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் மத்திய அரசு தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

Also read:ராஜஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், சுதிர் குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி, விசாரணையை தள்ளிவைக்கும்படி கோரிக்கை வைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் வருகிற 26-ந்தேதி பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிப்பதாக கூறி தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.