சிவகங்கை மாவட்டம் செவல்பட்டி கிராமத்தில் இருந்து ஒரு வேன் நாமக்கல் சென்றது. பின்னர் அந்த வேன் மீண்டும் சிவகங்கை நோக்கி சென்றது. காட்டுப்புத்தூர் அருகே ஏலூர்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வேன் வந்தபோது, வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரு சென்ற பஸ் மோதியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் கலைச்செல்வனின் கால் முறிந்தது. மேலும் வேனில் இருந்த தமிழரசி, போதுமணி, சண்முகப்பிரியா ஆகியோர் காயமடைந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.