தேனி அல்லிநகரம் ரத்தினம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி பொற்செல்வி. இன்று இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு தேனியில் உள்ள டிராவல்ஸ் நிறுவன அலுவலகத்திற்கு சென்றனர். இதையடுத்து மாலை வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகா செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.