திண்டுக்கல்லில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் இன்று பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வடமாநிலங்களில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதைப் போல தமிழகத்தில் அது போன்று நடக்குமா என முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. தேர்தல் முடிவு அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டும்.
தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இணைக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அது கைகூடாததால் தே.மு.தி.க. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து விட்டனர். ஏமாற்றம், விரக்தியின் உச்சத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி பல்வேறு கருத்துகளை தெரிவிக்கிறார். மக்கள் இதையும் அமைதியாக கவனித்து வருகின்றனர்
விஜய் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் இதற்கு தி.மு.க.தான் காரணம் என பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். தற்போது அனைத்து அரசு துறைகளும் தேர்தல் ஆணையத்தின் கீழ்தான் செயல்பட்டு வருகின்றன.
பணி செய்பவர்கள் தமிழக அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களை வழிநடத்துவது தேர்தல் ஆணையம்தான். எனவே விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்க தி.மு.க.தான் காரணம் என கூறி மக்களை திசை திருப்ப முயற்சி மேற்கொள்கின்றனர். மக்கள் அரசியலை அறியாதவர்கள் இல்லை. தங்கள் குறையை மறைக்க மக்களை ஏமாற்ற முடியாது' இவ்வாறு அவர் கூறினார்.