தமிழக செய்திகள்

பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்காத விஜய்; தமிழ் வரலாறு மீது அலட்சியம்.. - வானதி சீனிவாசன்

இது வெறும் மறதியல்ல, திட்டமிட்ட அலட்சியம் என்றே தோன்றுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இதுதான் உங்களது “நாகரிக அரசியலா”

தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டு கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு தமிழ் வரலாறு மீது எவ்வளவு அலட்சியம் இருக்க வேண்டும்? ஒட்டுமொத்த தமிழகமும் பிரதமரைப் பாராட்டி உச்சி முகர்ந்து கொண்டாடும் வேளையில், நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு தமிழக முதல்-அமைச்சர் என்ற முறையில் நீங்கள் இதுவரை பதிலாக மெத்த மௌனத்தையே சாதித்திருக்கிறீர்கள்.

இது வெறும் மறதியல்ல, திட்டமிட்ட அலட்சியம் என்றே தோன்றுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் உடனடியாக அறிக்கை கொடுக்கும் உங்களுக்கு, தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாற்றையும் உலகுக்கு மீண்டும் அறிவித்த பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லக்கூட தயக்கம் வருகிறதா?

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த உங்களின் நடவடிக்கைகள் கடந்த கால திமுக ஆட்சியை விட எந்த விதத்திலும் வித்தியாசமில்லை. தமிழர் வழிமரபில் வந்த நீங்கள், நமது தமிழ் வரலாறு மீட்டெடுக்கப்படும் போது அதற்கு பாராட்டு தெரிவிக்காமல் இருப்பதுதான் நாகரிக அரசியலா? உங்களால் மாற்றம் வரும் என்று நம்பி ஓட்டுப் போட்ட மக்களை இந்த மௌனம் ஏமாற்றுகிறது.

செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை சிறப்பாகக் கொண்டாடிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.