சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ந்தேதி கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்தம் அவகாசம் குறைவாக இருப்பதால் முதல் நாளான நேற்று முதலே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று முதல் நாளிலேயே வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில், தவெக தலைவர் விஜய் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
இந்தநிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் நாளை மறுநாள் ஏப்.2-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய தினம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதனையடுத்து பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் அனுமதி கேட்டு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் மற்றும் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.