சென்னை,
சென்னையில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்வதாக இருந்தது. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய தொகுதியில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தனர்.
இந்தநிலையில் விஜய் பிரசாரத்திற்கு நேற்று இரவு போலீசார் அனுமதி வழங்கினர். இதில் வில்லிவாக்கம் தொகுதியில் பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பிரசாரம் செய்து முடிக்கவும், தியாகராயநகர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் பிரசாரம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பிரசாரம் செய்து முடிக்க போதுமானதாக இருக்காது என கட்சி நிர்வாகிகள் தரப்பில் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது. போலீஸ் அனுமதித்த நேரத்திற்குள் பிரசாரத்தை முடித்துவிட்டு மற்றொரு இடத்திற்கு செல்ல காலதாமதமாகிவிடும் என்பதால், ரத்து செய்யப்பட்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.