கடலூர்,
2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார். இன்று அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் கடலூரில் நாளை விஜய் பிரசாரம் செய்வதற்காக த.வெ.க. சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் வடலூர். சேத்தியாத்தோப்பு. திட்டக்குடி, தொழுதூர் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது.
இதனையடுத்து 16 நிபந்தனைகளுடன் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு பிரசாரம் தொடங்கி இரவு 9.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடலூரில் நாளை நடைபெற இருந்த விஜய் பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், த.வெ.க. பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.