தமிழக செய்திகள்

அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28.11.2018 அன்றிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு கண்டும் காணாமலும் இருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

கிராம நிர்வாக அலுவலர்களாக 50 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் இருப்பதால் கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வைக்கும் கோரிக்கை மிக மிக முக்கியமானது மட்டுமின்றி, மனித உரிமை தொடர்புடையது. பெண்கள் கண்ணியமாக அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்குக் கூட போராட வேண்டிய அவலநிலை அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய அவமானம்.