தமிழக செய்திகள்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த கிராம மக்கள்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

காலிக்குடங்களுடன் கிராம மக்கள்

திண்டுக்கல் மேற்கு தாலுகா கன்னிவாடி அருகே கொரலம்பட்டி உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு, காலிக்குடங்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கொரலம்பட்டியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஒரு குடம் குடிநீர் ரூ.5 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். முன்பு காவிரி குடிநீர் 2 பகுதியாக குழாய் இணைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது அந்த குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

குடிநீர் வழங்க வேண்டும்

இதற்கிடையே மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குழாய் இணைப்புகளில் குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அவ்வாறு இதுவரை குடிநீர் வழங்கவில்லை. குடிநீருக்காக பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகிறோம். எனவே முன்பு போன்று குழாய் இணைப்பு கொடுத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் திரும்பி சென்றனர். கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT