சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 18 வயதை பூர்த்தி செய்யும் அனைவரும் தங்களை வாக்காளராக பதிவுசெய்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுகிறது. அதோடு பெயர் திருத்தம், பெயர் நீக்கம், தொகுதிக்குள் முகவரி மாற்றம், தொகுதியில் இருந்து இடம்மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ளவும் வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந் தேதியன்று (தேசிய வாக்காளர் தினம்) வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்படுகிறது. இதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்படும். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் அழைத்து கருத்து கேட்பது வழக்கமாகும். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு முடிவு செய்துள்ளார்.
இந்த கூட்டம் 29-ந் தேதி பகல் 12 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்திருத்தம், நீக்கம் தொடர்பான அந்தந்த கட்சியின் கருத்துகளை அவற்றின் பிரதிநிதிகள் தெரிவிப்பார்கள்.