சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. மாநிலம் முழுவதும் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னை மாநகராட்சியில் 43.59 சதவீதமே ஓட்டுகள் பதிவானது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட ஓடைகுப்பம் வாக்குச்சாவடியில் நுழைந்த மர்ம நபர் வாக்கு பதிவு இயந்திரத்தை உடைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ககன் தீப் சிங் பேடி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அந்த பகுதியில் தேர்தல் நடத்தலாமா? அல்லது வேண்டாமா? என மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் அனுப்பிவைத்துள்ளார். இந்த அறிக்கை மீது விரைவில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு இயந்திரம் உடைப்பு புகார் தொடர்பாக திமுகவை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.