தமிழக செய்திகள்

அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள் - நல்லகண்ணு உடல்நிலை குறித்து மு.வீரபாண்டியன் பேட்டி

மிகச்சிறந்த மருத்துவர்கள் தங்கள் திறன் முழுவதையும் பயன்படுத்தி நல்லகண்ணுவை காப்பாற்ற போராடுகிறார்கள் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியதாவது:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருக்கிறார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். தன் வாழ்வின் பெரும்பகுதியை நாட்டுக்காக, எளிய மக்களுக்காக அர்ப்பணித்த மகத்தான தலைவர் இயற்கையோடு போராடுகிறார்.

இதற்கிடையே அவரது உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிறது; அவை உண்மையல்ல. நல்லகண்ணு உடல்நிலை குறித்த மருத்துவமனையின் அறிக்கை வெளியானபிறகு, அதிகாரபூர்வமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முறைப்படி அறிவிப்புகளைச் செய்யும். அதுவரை எத்தகைய தகவலையும், யாரும் நம்ப வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Also read:குடும்ப தகராறில் பயங்கரம்: மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகள்

மருத்துவம், உயிர் சம்பந்தபட்டது என்பதால் மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிக்கை வரும்வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காத்திருக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ அறிக்கை வரும் வரை தமிழ் மக்கள் காத்திருங்கள். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும், அதை அறிவிக்க வேண்டியது மருத்துவத்துறை. அதுதான் அதிகாரபூர்வ அறிவிப்பாக இருக்கும். கட்சி என்கிற முறையில் அந்த அறிவிப்பு வந்த பிறகுதான் நாங்கள் வெளியிட முடியும்.

மிகச்சிறந்த மருத்துவர்கள், தங்கள் திறன் முழுவதையும் பயன்படுத்தி அவரை காப்பாற்ற போராடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.