சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்(தே.மு.தி.க.) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
கேப்டன் விஜயகாந்தின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தே.மு.தி.க. கட்சி உருவானது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. முத்திரை பதிக்கும். தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணியே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். தற்சமயம் கூட்டணி குறித்து அறிவிக்க முடியாது. உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்.
மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். மேலும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் வந்தே பாரத் ரெயில்களை இயக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.