தமிழக செய்திகள்

தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் - வைகோ அறிக்கை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு மத்தியில் பொறுப்பேற்ற நாளில் இருந்து ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து வரும் பா.ஜ.க. அரசு, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து வருகிறது.

மத சகிப்பின்மை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு எனும் பெயரால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு போன்றவை மட்டுமின்றி அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தோர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் டெல்டா மக்களின் மீள்வாழ்வுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மோடி அரசு வஞ்சகம் இழைத்து விட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் நிறுவவும் துடிக்கிறது.

பிரதமர் நரேந்திரமோடி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வருவது அவரது உரிமை. ஆனால் தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் இழைத்து வரும் பிரதமர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கருப்புக்கொடி காட்டுவோம். 10-ந்தேதி திருப்பூருக்கும், 19-ந்தேதி கன்னியாகுமரிக்கும் வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.